Showing posts with label படைப்பு. Show all posts
Showing posts with label படைப்பு. Show all posts

Friday, July 8, 2011

படைப்பாளன்

எப்படியோ இருக்கிற சரக்கெல்லாம் பயன்படுத்தி பிளாகில் முதல் பதிவு செய்து நானும் படைப்பாளி ஆகிவிட்டேன்!

இனி நானும் 29c இல் மூன்றாவது இருக்கையில் இருந்த கம்பி துருப்பிடித்திருக்கிறது, அரசின் சமீபத்திய திட்டத்தில் தொலைநோக்குப் பார்வை இல்லை, நேற்று என்னை அலுவலகத்தில் திரும்பி பார்த்த பெண்ணின் காலில் மெட்டி இருக்கிறது, குப்பன் என்ற எழுத்தாளன் எழுதுவது எல்லாம் குப்பை, சுப்பன் எழுதுவது எல்லாம் சாக்கடை, இலியானாவின் இடுப்பளவு இரண்டு இன்ச் கூடிவிட்டது, கோடிக் கணக்கில் செலவு செய்து சமீபத்தில் வெளியானடமால்திரைப்படம் பணாலாகி விடும், பதிவிறக்கம் செய்து பார்த்த கொரியன் படத்தில் வசனங்கள் எல்லாம் கொரிய மொழியிலேயே உள்ளது இருந்தாலும் அது உலகத்தரமான படம் என்றெல்லாம் கண்டதையும் கிறுக்கலாம்.

NHM writer இருப்பதால் கிறுக்கல் என்பதை மொழியும், கருத்தும் மட்டும் சிதைவுற்று இருக்கிறது என பொருள் கொள்க! எழுத்தின் தன்மை அச்சால் பிழைத்தது! இதை எல்லாம் பேனாவால் என்னால் எழுதி இருக்க முடியுமா என்றால் கலைஞரின் தேநீர் விருந்தில் அம்மா கலந்து கொள்ளும் அளவிற்கு சாத்தியமில்லாதது.

பள்ளிக்காலத்தில் கையெழுத்து திருந்த மணிக்கட்டில் பிரம்பால் அடிவாங்கிய என்னைப் போன்ற சாதனையாளர்களுக்கு இந்த பதிவுலகம் ஒரு வரப்பிரசாதம்! எனது கையெழுத்து புராணம் ஒரு பதிவு எழுதும் அளவுக்கு சிறப்புடையது என்பதால் அதை வேறொரு பதிவில் பார்ப்போம்.

அடுத்து இந்த பதிவை எழுதத் தொடங்கும் போது, வீட்டை விட்டு வெளியே செல்லும் போது பெசண்ட் நகர் போக என்ன பேருந்து பிடிக்க வேண்டும் என எண்ணிக்கொண்டு (ஆனால் நான் பெசண்ட் நகர் போகப்போவதில்லை போவதாகவும் உத்தேசமில்லை), என்பது போல் என்ன எழுதப்போகிறேன் என்றே தெரியாமல் ஒரு (வழக்கம் போல்) குழப்பமான மனநிலையிலேய அமர்ந்தேன்!

அப்போ இதுக்கு முன்னாடி நின்னுட்டு இருந்தியா?னு கேட்கக்கூடாது! எதற்காக இதைப் பற்றி கூறுகிறேன் என்றால் இந்த படைப்பிற்கு ஒரு தலைப்பு வேண்டுமே! பெசண்ட் நகர் போகமல் போகவும் உத்தேசமில்லாமல் பேருந்தைப் பற்றி எண்ணலாம்! ஆனால் பெசண்ட் நகர் பற்றியே முடிவுக்கு வராமல் பேருந்தைப் பற்றி சிந்திப்பது எப்படி இருக்கும்? அந்த இடத்திற்கு போவதற்கு எந்த பேருந்தை பிடிக்கவேண்டும் என்று எண்ணுவது போலிருக்கும். 

அதனால் இந்த பதிவெழுதத் தொடங்கும் போது “Project 2” என்ற தலைப்பில் தான் தொடக்கினேன்! அந்த வார்தையைக் கண்டவுடன் போன வருடம் நான் “Unapplied cash and credit” இல் செய்த பிராஜக்ட் தான் நினைவுக்கு வந்தது! அதைப் பற்றிப் பதிவினால் (எழுதினால் என்று பொருள் கொள்க) அனைவருக்கும் கணக்கு பதிவியல் பற்றியும், பைனான்ஸ் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்! (இந்த பத்தி சத்தியமாக சுயதம்பட்டம் அடிப்பதற்காக அல்ல).

ஆங்! தலைப்பு! தலைப்பு வைத்தாயிற்று! தலைப்புக்கு ஒட்டி ஏதாவது எழுத வேண்டும்! அதைப் பற்றி எழுத என்னிடம் ஒன்றும் இல்லை. எதைப் பற்றி எழுதவும் என்னிடம் ஒன்றும் இல்லையாம் பாழாய்ப் போன தன்குரல்! சரி என்ன எழுதலாம்?

இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி தோண வேண்டும் நேரம்: 2:00AM உனக்கு வேறு வேலை இல்லையா என்று! மிகச் சரியான பதில் வேலை இல்லை! Process training என்ற பெயரில் வெட்டியாகத்தான் அமர்ந்திருக்கிறேன்! இதற்காகத்தான் ஆறாம் பத்தியில் ஏன் நின்று கொண்டிருந்தாயா என்று கேட்கக் கூடாது என்று கூறினேன்

ஆம் நான் அமர்ந்திருக்கிறேன்! தலைப்பு இருக்கு! ஆனால் எழுத ஒன்றும் இல்லை! ஆக நான் ஒன்றை படைக்க வந்தேன் ஆனால் எதைப் படைக்க என தெரியவில்லை! சார்லஸ் பேபேஜாக இருந்தால் கணிப்பொறியை படைத்திருந்திருக்கலாம், லூகோ பேசியோளியாக இருந்திருந்தால் கணக்கு பதிவியலின் விதியைப் படைத்திருந்திருக்கலாம், கண்ணதாசனாக இருந்தால் ஒரு கவிதையை படைத்திருந்திருக்கலாம், கண்ணனாக இருந்தால் காதலை படைத்திருந்திருக்கலாம்.

படைப்பு! படைப்பு!! படைப்பு!!! கிடைத்தது தலைப்பு! அடேடே என் முதல் பத்தியிலேயே இந்த வார்த்தை இருக்கிறதே! உள்ளிருக்கும் இறைவனை வெளியே தேடுவது போல் பதிவிலிருக்கும் தலைப்பை வெளியே தேடிக்கொண்டிருந்திருகிறேன்!

அப்படி என்றால் தலைப்பே இல்லாமல் பதிவைத் தொடங்கி அதில் தலைப்பு கிடைத்து விட்டது! அப்போ தலைப்பு இல்லாமல் பதிவு எப்படி உருவானது? பெசண்ட் நகர் பற்றி தெரியாமலே பேருந்தில் ஏறாமலே பெசண்ட் நகர் வந்து விட்டேன்! நிற்க! எனக்குத் தான் பெசண்ட் நகர் போக உத்தேசமே இல்லையே! பதிவு தானே எழுத வேண்டும்! 

தலைப்பு தான் தலைகாட்டி விட்டதே! இனி பதிவு எழுத வேண்டும்! அட தலைப்பைப் பற்றி படைத்ததே பதிவாகி விட்டதே! ஏதோ ஒன்றை படைத்து விட்டேன்! இனி நானும் படைப்பாளன் தான்!
அப்படி என்றால் இனி 29c இல் மூன்றாவது இருக்கையில் இருந்த கம்பி துருப்பிடித்திருக்கிறது…………………………..


நீதி: Circular reference