Monday, October 31, 2011

பல்லி




”டேய்! இன்னிக்காவது சீக்கிரம் எழுந்து வீட்டு வேலையை கொஞ்சம் பாருடா. நடுராத்திரி வரைக்கும் அந்த கம்ப்யூட்டர் பெட்டி இல்லைனா செல்போன்.”

வழக்கமாக 10 மணிக்கு தொடங்கும் லட்சார்ச்சனை இன்று ஏன் வைகறையான 8 மணிக்கெல்லாம் தொடங்கியது என்ற என் கேள்விக்கு பதில் பாகிஸ்தான் குண்டு வெடிப்புக்கு பிறகு வரும் கண்டன அறிக்கைப் போல பறந்து வந்தது.

”ஆயுத பூஜை வேற வருது இப்பவாவது சுத்தம் பண்ண ஆரமிச்சா தான் சரியா இருக்கும்.”

”எந்திரிச்சு பல்ல தேய்டா முதல்ல அதுக்குள்ள செல்போன்”.

“என்னம்மா இப்ப அவசரம்? ஞாயிற்றுக்கிழமை தானே ஒரு நாள் நிம்மதியா தூங்கவிடமாட்டியா?”

இப்படித்தான் அந்த ஞாயிற்றுக்கிழமையின் காலை புலர்ந்தது. அலுவலகத்தில் புதிதாக சேர்ந்த அந்த ஐம்பது கிலோ ரசகுல்லா Facebookஇல் எனது friend request அங்கீகரித்த அடுத்த நாள் இப்படியா தொடங்க வேண்டும்? நம்பர் வேற வாங்கியாச்சு! எப்படியாவது இன்னிக்கு முதல் முதலில் போனில் பேசிவிடவேண்டும் என்ற எண்ணத்தை உடைத்தது அடுத்த அணுகுண்டு.

“என்னடா அந்த செல்போன பார்த்து சிரிச்சுகிட்டு இருக்க?” அம்மாவின் அதட்டலோடு பல் துலக்கி காலண்டரில் சிரித்துக் கொண்டிருந்த பிள்ளையாருக்கு காலை வணக்கம் சொல்லிவிட்டு என்றும் ருசி மாறா அம்மா காபியைக் குடித்துவிட்டு மறுபடியும் facebookஇல் நுழைந்தேன்.

என் அம்மாவுக்கு அவள் மருமகளை பார்க்க ஆசை இல்லைப் போல. குளிக்கப்போகுமாறு உத்தரவு வர துண்டை எடுத்துக்கொண்டு நகர்ந்தபோதுதான் செய்தித்தாள் கண்ணில் பட்டது.

“எம்.பி எம்.எல்.ஏவை திரும்பி அழைக்கும் முறை நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒரு விசயம்” – தலைமை தேர்தல் அதிகாரி. என் நினைவெல்லாம் இப்போது அரசின் கையாலாகத்தனம் நோக்கித் திரும்பியது. என் வீட்டு வேலைக்காரன் சரியாக வேலை செய்யாத போது எனக்கு அவனை நீக்க உரிமையில்லா தன்மையை என் கையாலாகத்தனம் என்று சொல்வதே சரி.

”ஒன்னு செல்போன், இல்ல எதாவது புஸ்தகம் இப்போ குளிக்கப் போரியா இல்லையா?”

அம்மா பேப்பராவது படிச்சுட்டு போரேன். இரும்மா என்றபடி நேற்று நாட்டில் நடந்த திருட்டு, கொலை, கொள்ளை, சட்டமாக்கப்பட்ட கொள்ளை (அதாங்க அரசியல் செய்திகள்) எல்லாம் பார்த்துவிட்டு குளியலறையில் நுழைந்தேன். ஷவரைத் திருகிய போது தண்ணீர் வரவில்லை. கடுப்பில் அம்மாவென கத்த, என் கடுப்பை எதிர்பார்த்தது போலவே டேய் ஷவர் ரிப்பேர் ஒழுங்கா பக்கெட்டில் குளித்துவிட்டு வா என அம்மாவின் குரல் பாத்ரூம் கதவை ஊடுருவி வந்தது.

“என்ன வாழ்க்கை டா இது? காலையில் எழுந்தா facebook பார்க்க முடியல, பேப்பர்ல நல்ல செய்தி இல்லை, ஷவர் வேலை செய்யல என்ற எண்ண அருவியிலும் குளித்து வெளிவந்தபோது அதை விட ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அம்மா துடைப்பமும் கையுமாக ஒரு சாக்குப்பையை நிரப்பிக் கொண்டிருந்தார். அதிலென்ன அதிர்ச்சி என்பவர்களுக்கு அம்மா அந்த நீல சாக்குப்பையை எடுத்தால் அன்று முழுவதும் என் நாள் சமையல் அறை மேலிருக்கும் பரணிலோ இல்லை மொட்டை மாடியில் இருக்கும் தேவையில்லா பொருட்கள் போடும் அறையிலோ தான் கழியும். அதுவும் ஆயுத பூஜை நேரம் வேறு. இந்த ஞாயிற்றுக் கிழமை காலிடா எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டே தோசையையும் கொத்துமல்லி சட்னியையும் உள்ளே தள்ளினேன்.

ரமணன் அவர்களது வானிலை கணிப்பு மாதிரி இல்லாமல் என் கணிப்பு மிகச்சரியாக வேலை செய்தது. ”இன்னிக்கு ஒழுங்கா வீட்டை எல்லாம் சுத்தப்படுத்தினாதான் ஆயுத பூஜைக்கு நிம்மதியா இருக்கலாம். அதனால ஒழுங்கா அந்த சந்தன கலர் ஷார்டச மாத்திட்டு ஏதாவது டார்க் கலர்ல ஏதாவது ஒன்ன மாட்டிகிட்டு சீக்கிரம் மொட்டை மாடி ரூமுக்கு வந்துடு” என்று சொல்லியபடியே அம்மா மேலே போனாள்.

நானும் முதலமைச்சரின் கார் பின்னே செல்லும் பாதுகாப்பு கார் போலவே அம்மாவின் பின்னாடி சென்றேன். இரு மணி நேரங்கள் தூசியோடு போரட்டம் நடத்தி இரண்டு சாக்கு நிறைய குப்பையை தெரு முனையில் கொட்டிய பின் ஒரு பழரசம் வந்தது. அம்மாவுக்கு உழைப்பதன் பலன் இதுதான். அவ்வப்போது எதிர்பாராத வாயூட்டு கிடைத்துக்கொண்டே இருக்கும்.

“எம்மா எம்மா காதல் பொன்னம்மா. நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ள காயமாச்சம்மா பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா” என சூர்யா அலைபேசியில் இருந்து பாடினார்.

சே! எத்தனை தடவை பட்டாலும் காதலுக்கு மட்டுமில்லை இந்த செல்போனுக்கும் புத்தி வருவதே இல்லை. ஒழுங்கா சட்டைப்பையில் வைப்பதே இல்லை. எங்காவது வைத்துவிட்டு எங்கையோ தேடுவது காதலை மட்டுமல்ல செல்போனையும் தான். ஒரு வழியாக சூர்யாவின் பாட்டை பச்சை பட்டனின் துணைக்கொண்டு நிறுத்தி “ஹலோ” என்றேன்
மறுமுனையில் முன்சொன்ன நடமாடும் நட்சத்திரம் “ஹேய்! நான் தான்! எப்படி போகுது Weekend” என்று பாடினாள்.

உன்னைப் பார்க்காம என் life end ஆகிவிடும் போல இருக்கு என சொல்லவந்து சொல்லாமல் “ஆயுத பூஜைக்கு வீட்டை தயார் செய்து கொண்டிருக்கிறேன் அம்மா பெண்டு கழட்டுராங்க” என்றேன்

“ஹா ஹா ஹா” என்று சிரித்தபோது தலையில் இடித்துக்கொண்டேன். நிமிர்ந்தால் கட்டிடத்தின் உச்சி. சே ஒரு சிரிப்பில் என்னை மிதக்க வைத்துவிட்டாளே என்ற நினைத்த போது அவள் சிரித்து முடித்தாள். அவள் ஈர்ப்பு சென்று புவியீர்ப்பு திரும்பியது நானும் நிலத்துக்கு திரும்பினேன்.

“என்ன திடீரென்று கால்” நான்.

“ஏன் பண்ணக் கூடாதா?” அவள்

“டேய் இந்த குப்பையக் கொட்ட சொன்னா அங்க என்னடா செல்போனில் அரட்டை” அம்மா.

“அம்மா ஒரு ஐந்து நிமஷம் பேசாமல் இரு” என்றபடி வெளியே சென்று உன் நம்பர் இருப்பதால் தானே இந்த செல்போனுக்கு உயிரே இருக்கு நீ கூப்பிடாம எப்படி என வழக்கம் போல் சொல்ல நினைத்து சொல்லாமல். 

“ஹே! அப்படி எல்லாம் இல்ல. தீடீர்னு கூப்பிட்டல்லே அதான்…..”
“ஒன்னும் இல்ல! Office laptopஇல் என் வீட்டு broadband connect செய்யவேண்டும். Customer care கூப்பிட்டால் சரியான ரெஸ்பான்சே இல்லை. அதான் உனக்குத் தெரியுமா எனக் கேட்க கூப்பிட்டேன் என்றாள்.”
உன் இதயத்துக்கும் என் இதயத்துக்குமே இணைப்பு கொடுக்கப் போறேன் laptopக்கும் broadbandக்கும் இணைப்பு கொடுக்க மாட்டேனா என்ற mind voiceஐ அப்படியே கட் செய்து அப்படியே போனிலையே அவ்வப்போது வழிந்து, ஐந்து நிமிடம் சொல்லவேண்டிய வழிமுறையை 15 நிமிடம் இழுத்தேன். பேசி முடித்து மதிய சாப்பாடு மெனுவும் விசாரித்து ஒரு வழியாக ஞாயிற்றுக் கிழமை பிரகாசமாக மதிய நேரத்தை எட்டியது.

மீண்டும் உள் நுழைந்து நான்கு முறை சாக்கை நிரப்பி, தெருமுனைக்கும் என் வீட்டுக்கும் நடந்து வழியில் முறைத்துப் பார்த்த தெருநாய்க்கு பயந்தும் பயப்படாமல் வீடு திரும்பினேன்.

அம்மாக்கள் எல்லாம் எப்படித்தான், எங்கிருந்துதான் Multi tasking கற்றார்களோ தெரியவில்லை என்னோடே மொட்டை மாடியில் சுத்தம் செய்து கொண்டிருந்த அம்மா. மதியம் ஒன்றரை மணிக்கு மிகச் சரியாக சமையலை முடித்திருந்தாள். சாப்பிட்ட பின் சோனி பிக்சில் “Stardust” படம் பார்த்திருந்தேன். ஏற்கனவே இரு முறை பார்த்த படம் என்றாலும் மூன்று முறை அம்மா கூப்பிட்டது நான்காவது முறையாக என் காதில் விழுந்தது.
”டேய் மழை பெய்தால் அந்த சாமி அறை ஜன்னல்ல தண்ணீர் சொட்டுது இரண்டு மாசம் தான் ஆகுது அதுக்கு பலகை அடித்து. அதையும் கொஞ்சம் பாருடா” என அம்மா அன்பை சரியான இடத்தில் கலந்து மிக்சராக கொடுத்தாள். கடுப்பில் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு சென்றேன். அந்த அறைக்கு சாளரம் இருக்ககூடாதாம். அதனால் அதை சாத்தியே வைத்திருந்தார்கள் இருந்தாலும் வாஸ்து படி அதை அடைக்கவேண்டும் என்பதால் நான் ஒரு பலகையை வைத்து ஆணி அடித்துவிட்டேன். இப்போது அதன் வழியாக தண்ணீர் வருகிறது. பலகை நகர்ந்திருக்க வேண்டும். மீண்டும் ஆணி சுத்தி எடுத்துக்கொண்டு என் வீட்டு கடவுள் வாழும் அறையை நோக்கி சென்றேன்.

சாளர கதவை திறந்துப் பார்த்தேன். பலகை தண்ணீரால் அரிக்கப்பட்டிருந்தது. அதை எடுக்க ஒவ்வொரு ஆணியாக தட்டி எடுத்துக்கொண்டே இருந்த போதுதான் அது என் கண்ணில் பட்டது. என் உள்ளங்கையை விட நீளம் அதிகம் இருக்கும். இரு இன்ச் அகலம். கருப்பு கண்கள். மரக்கட்டை போன்ற உடல். மேலே இறைவன் வரைந்த மார்டன் ஆர்ட். பல்லி. என்ன ஆச்சர்யம் அவ்வளவு அருகில் நான் கையை கொண்டு சென்றும் அசையாமல் நின்றது. ஏதோ ஒரு அசைவு நிகழ்ந்தாலும் அது நகரவே முயற்சிக்கவில்லை. ஒரு வேளை அமெரிக்காவின் ஆதரவுப் பல்லியோ இப்படி அஞ்சாமல் நிற்கிறதே என எண்ணியப்படி “சூ” என்றேன் அப்படியும் நகரவில்லை. குழப்பத்தில் உற்று நோக்கியபோது தான் தெரிந்தது அதன் கால் எதிலோ சிக்கி இருந்தது.

ஓடிச் சென்று ஒரு டார்ச் எடுத்து வந்து வெளிச்சம் பாய்த்திய பின் தான் தெரிந்தது அதன் கால் எதிலோ மாட்டி இருக்கவில்லை. ஆணியால் பலகையில் அடிக்கப்பட்டிருந்தது. அட! நான் அந்த ஆணி அடித்து இரு மாதங்கள் ஆகி இருக்கும். அது எப்படி ஆணி அடிக்கும் போது அங்கு வந்தது என்ற கேள்வியை விட எப்படி இன்னும் இந்தப் பல்லி இரு மாதங்கள் உயிரோடு இருக்கிறது? என்ற கேள்விதான் தலையைக் குடைந்தது.

சரி ஒரு மணி நேரம் பார்ப்போம் என்றபடி “Angry birds”ஐ திறந்தேன். அம்மா மதியத் தூக்கத்தில் இருந்து விழிக்க எப்படியும் இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். அது வரை பார்க்கலாம் எதுவும் விடை கிடைக்கவில்லையெனில் ஆணியை எடுத்து பல்லியை விடுவித்து விடலாம் எனத் திட்டம்.
ஐந்து நிமிடம் தான் கழிந்திருந்தது. அந்த இருளடைந்த மூளையில் இன்னொரு அசைவு தெரிந்தது. டார்ச் அடித்தால் பிரச்சனை என்று என் செல்போனை அந்த இடுக்கில் காட்டினேன். கிட்டதட்ட அதே போன்ற இன்னொரு பல்லி. அட எம்.ஜி.ஆர் படம் போலவே இருந்தது. இல்லையே இன்னும் வெளிச்சத்துக்கு வந்த போது. காலில் குண்டு பாய்ந்த (சே தமிழ் படம் பார்த்து கெட்டுப்போயிட்டேன்) ஆணி பாய்ந்த பல்லியை விட சற்று பருமனும் குறைவு. நிறமும் கம்மி. வேற மார்டன் ஆர்ட் உடலில். வாய் சற்று உப்பி இருப்பது போல் இருந்தது. வாயில் குற்றுயிரும் கொலை உயிருமாய் ஒரு கரப்பான்.

அட! என்ன ஆச்சரியம். எடுத்து வந்த கரப்பானை பாதி மட்டும் விடுவித்தது. தனக்கு விடுதலை என நினைத்த கரப்பான் வெளியில் தெரிந்த இரு கால்களை பின் நோக்கி வைத்த போது மிகச் சரியாக அது அடிபட்ட பல்லியின் வாயில் வைத்தது. மிக லாவகமாக வாயாண்டது அடிபட்ட பல்லி. முழு கரப்பானும் இதன் வாய்க்கு சுவிஸ் பாங்கில் பணம் கணக்கில் மாறுவது போல வாய் மாறியது. எப்படி இரு மாதங்கள் இந்தப் பல்லி உயிரோடு இருந்தது என இப்போது புரிந்தது எனக்கு.

எத்தனை நாட்கள் விடுதலை என மாட்டிக்கொண்டிருந்த பல்லிக்கு தெரியாது. எத்தனை நாட்களுக்கு உணவு கொண்டு வரவேண்டும் என அந்தப் பல்லிக்கும் தெரியாது. ஆனால் அது இந்தப் பல்லியின் மன உறுதியும் குலையவில்லை அந்தப் பல்லியின் விடாமுயற்சியையும் குறையவில்லை. ஒரு வேளை இது தாய் மகனாக இருக்குமோ? இல்லை கணவன் மனைவியாக இருக்குமோ? ஆண் பல்லி எது பெண் பல்லி எது என்றெல்லாம் கண்டுபிடிக்கும் திறமை எனக்கில்லை. ஆனால் இறைவனின் படைப்புகள் தாம் எவ்வளவு விசித்தரமானவை?

ஒரு வழியாக அதன் உணவை முடித்த பின் எல்லா ஆணிகளையும் எடுத்தபின் அந்தப் பல்லியின் காலின் ஒரு பகுதி கீழே விழுந்தது. மீதி இருக்கும் தன் உடலின் பாகங்களையும், என் ஆச்சர்யங்களையும் சுமந்து கொண்டு தாவி ஓட முடியாததால் தவ்வி ஓடியது. மீண்டும் பலகையை அடித்தேன் எந்த இடைவெளியும் இல்லாமல். பல்லி எதுவும் மாட்டிக்கொள்ளவில்லை இரு முறை சரி பார்த்துக் கொண்டேன்.

வந்து கணிப்பொறியை இயக்கினேன். வழக்கம் போல் முதலில் facebook அட அவளின் பேருக்கு மேல் பச்சை பல்ப். ஆன்லைனில் இருக்கிறாள். நான் என்ன செய்யலாம் என்று பார்த்திருந்த போதே “hi” என்று அவள் பெயர் போட்டு ஒரு Pop up.

”டேய்! மாடி ஏறி இறங்கினது கால் வலிக்குது. போய் பாலும் bru பாக்கெட் ஒன்றும் வாங்கிட்டு வாடா” அம்மா.

இம்முறை நான் brb என டைப்பிவிட்டு மானிட்டரை அணைத்துவிட்டு எழுந்த போது என் புருவங்களில் சுருக்கம் இல்லை. மாறாக என் உதட்டில் ஒரு புன்னகை இருந்தது.

”சட்”

“சட் சட்”

”சட் சட் சட்”

எங்கோ பல்லியின் அந்தக் குரல் கேட்டது.

Disclaimer: இது ஒரு ஆங்கில கதையையும் லக்கி கிருஷ்ணா அவர்களின் பதிவு ஒன்றையும் படித்து கலந்து அடித்து எழுதியதே. இரண்டுக்குமான சுட்டிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Thursday, October 27, 2011

ஏழாம் அறிவு



சூர்யாவின் நடிப்பில் சிகப்பு பூதம் தயாரிப்பில் மெமண்டோ சே கஜினி புகழ் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகி மொக்கை, Documentary என்றெல்லாம் பாராட்டுக்களை குவித்துக் கொண்டிருக்கும் திரைக்காவியம்.

படத்தின் பெயர் நியாயமாக போதி தர்மர் என்று தான் இருந்திருக்க வேண்டும். இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறை அவரின் பெயர் படத்தில் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாடு மறந்த தமிழர்களில் ஒருவன். அவரைப் பற்றி ஒன்றும் தெரியாததுதான் அதற்காக நஞ்சுணவை வேண்டுமென்றே உண்டு இறப்பதெல்லாம் காதில் பூக்கடை.

சூர்யா சொல்லவே தேவையில்லை வயிற்றில் படிக்கட்டோடு மிகவும் மெனக்கட்டிருக்கிறார். பெரிதாக நடிக்கத் தேவையில்லாத கதாபாத்திரம். சிரித்தால் அழகாக இருக்கிறார் என்கிற ஒரே காரணத்துக்காக காதல் தோல்வி பாட்டிலும் அந்த ஓரச் சிரிப்பு தேவையா?

சுருதி! வாவ் என போஸ்டரில் பார்த்து போனால் அந்த அளவு ஒன்றும் இல்லை! பாடல் காட்சிகளில் எப்படி கேமராவை பார்க்க வேண்டுமென்று அப்பாவிடம் கேட்டுக்க செல்லம்.

வில்லன் அந்த சீனப் பையன் கண்ணிலேயே நிற்கிறான். தமிழ் சினிமாவில் இனி அடிக்கடி பார்க்கலாம் என நினைக்கிறேன்.

இனி படம். சீன ***(சென்சார் கட் கவர்மெண்ட் என்று சொல்லக்கூடாதாம்) இந்தியாவில் ஒரு பயோ யுத்ததை தொடங்கினால் சுருதியின் ஆராய்ச்சியால் அது சூர்யாவின் உதவி கொண்டு முறியடிக்கப்படும் அதனால் யுத்தமும் தொடங்க வேண்டும், இவர்கள் இருவரும் இறக்க வேண்டும். இதான் கரு. இந்தியாவில் போதி தர்மரால் மட்டுமே முறியடிக்கப்படும் வைரசை பரப்ப முயலுகிறான் வில்லன். கொய்யால பஞ்சாப் கூட இந்தியாவில் தானே இருக்கு வைரச அங்கு பரப்பிவிட்டு இங்கு வந்து சுருதிய கொலை செய்யலாம் இல்ல.

ஆனால் நாம் எப்படி நமது கலாசாரத்தையும், வாழ்வியலையும் மறந்து அன்னிய மொழிக்கும், கலாசரத்துக்கும் அடிமையாகிக் கொண்டிருக்கிறோம் என சுருதி கதாபாத்திரம் மூலம் நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார் இயக்குனர். அதுவும் தமிழ் புத்தகத்தில் இருப்பதை வைத்துக்கொண்டெல்லாம் ஆராய்ச்சியில் ஈடுபட முடியாது என சொல்வது நச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்.

படத்தின் மிகப்பெரிய + & - பட தொடக்கத்தில் போதி தர்மனைப் பற்றிய documentary. ஏனுங்க நாங்க இசுக்கூலுக்கு வந்திருக்கோமா இல்ல தியேட்டருக்கு வந்திருக்கோமா? போதி தர்மரைப் பற்றி சொல்ல வேண்டினால் அழகாக படத்தின் இடைச்செருகலாக அவ்வப்போது வைத்திருந்தால். இரண்டு காலத்துக்கும் போய்விட்டு வந்தது போல உணர்விருந்திருக்கும்.

ஏம்பா ஹாரிசு, போதி தர்மாவை முதலில் காட்டும் போதும் அவர் திரும்பி வரும் போதும் ஒரு வாத்தியம் வாசிக்கப்படுகிறதே என்னப்பா அது! வேற வாத்தியக் கருவியே கிடைக்கலையா இல்ல electrical instruments மட்டுந்தான் பயன்படுத்துவிங்களா (இப்பத் தெரியுதா இளையராஜா அருமை).

இலங்கை கொலைகளத்துக்குப் பிறகு அதைப் பற்றி தைரியமாக ஒரு வணிகப்படத்தில் வசனங்கள் வைத்தது பாராட்டதக்கது. ஆனா அந்த “திருப்பி அடிக்க வேண்டும்” தான் பயமா இருக்கு. நல்ல வேளை சூர்யா என்பதால் பெரிதாக ரீச்சாகவில்லை. முக்கியமா யாழ்பாண நூலக வசனமும் நல்ல விசயம். தமிழ் பேசுவதால் தமிழன் என்ற கர்வம் வந்தால் அது இன கர்வம். அதுவே அறிவைப் பரப்பி, அன்பைப் பரப்பி வந்தால் தான் அது பெருமை என்றும் சொல்லி இருக்கலாம்.

ஒன்று மட்டும் உண்மை தமிழ் உணர்வை வியாபாரம் ஆக்கப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு மத்தியில் படம் வந்திருந்தாலும், நிஜமாக தமிழர் என்ற உணர்வே இல்லாமல் நான் (எழுத்துப் பிழை அல்ல நான் தான்) வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்று சொல்லிய படம். என்று வரலாற்றை வைத்துக் கொண்டு நாம் நம் கால்களால் நிற்க முயற்சிக்கிறோமோ அன்று சொல்லலாம் நான் தமிழன் என்று. தமிழால் கர்வம் என்று.

மற்றொரு பாராட்டப் பட வேண்டிய விசயம் காமெடி. அப்படியென்று ஒன்று தனியாக படத்தில் கிடையாது (தனி track வைத்து சொதப்பாமல் இருந்த இயக்குனருக்கு ஒரு நன்றி).

படத்தின் மேலும் ஒரு அழகிய ஈர்ப்பு “நோக்கு வர்மம்”. அட இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு செய்யவைக்க முடியும் என்ற தியரி மிக எளிதாக சூப்பர் ஹீரோவையும் சூப்பர் வில்லனையும் உருவாக்க முடிகிறது. அந்தப் காவல் நிலையத்தில் வில்லன் நுழையும் காட்சிகள் Terminator என எளிதாக பத்து வயது குழந்தைக் கூட சொல்லிவிடும். முருகதாஸ் நீங்க கொஞ்சமாவது சொந்தமா யோசிங்க.

அழகான ஒளிப்பதிவு. சீனத்துக் காட்சிகள் அவ்வளவு அழகு.எடிட்டிங் என்றால் என்னவென்றே தெரியாத எனக்கு படத்தின் இறுதி காட்சி பார்த்த பின் நான் சொன்னது “செம எடிட்டிங்”. கலக்கல்.

படத்தின் மிகப்பெரிய மைனசான பாடல்களை சரியான இடத்தில் செருகி இருந்திருந்தால், சூர்யா சுருதி காதல் காட்சிகளையும் சுவாரசியமாக கொண்டு சென்றிருந்தால், ஏழாம் அறிவு நிஜமாகவே ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படமே.

பி.கு: இந்தப் பதிவு “ஏழாம் அறிவு எனக்கு ஏன் பிடித்தது?” என்றே வைத்திருந்தேன். ஆனால் விமர்சனத்தின் நடுநிலையைக் கெடுத்து விடும் என்பதால் வெறும் ஏழாம் அறிவு.

Wednesday, October 26, 2011

பலூன்



நம் வாழ்க்கையில் அனைவரும் ஒரு கட்டத்தில் ஆசையாகவும் மற்றொரு கட்டத்தில் ஆயாசத்துடனும் பார்க்கும் ஒரு விசித்திர வஸ்து. கடவுளுக்கு அடுத்து பல நிறங்களிலும், பல வடிவங்களிலும் இந்த உலகில் பறந்து கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியும் கடவுள். நைட்ரஜன், ஹீலியம் என பல வாயுக்களால் நிரப்பப்பட்டாலும் நம் தெருக்களில் விற்கும் பலூன்கள் மற்ற இந்தியத் தயாரிப்புகள் போல கலப்படமாகவே உருவாகிறது. வாயுக்களின் கலப்படம் தானே காற்று?

மனிதன் ரப்பர் கண்டுபிடித்த பின் அதை மனமகிழ்ச்சிக்கும் பொழுதுபோக்குக்கும் இதை பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்த டேவிட் ரப்பர்(நாமளா போட்டுக்க வேண்டியது தான்) நிச்சயம் பாராட்டுக்கு உரியவனே. எம்.ஆர் ராதா சொன்னது போல, நாம் நீராவியில் புட்டு சுட்டுக் கொண்டிருக்க, வெளிநாடுகளில் அவனவன் அதை பலூனில் நிரப்பி பறக்க விட்டுக் கொண்டிருந்தான். பலூன்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடுகளுக்கிடையே போக்குவரத்துக்குக் கூட பயன்பட்டுள்ளன. பாராசூட் கூட பலூனுக்கு ஒன்று விட்ட தம்பியாகவது இருக்க வேண்டும்.

இந்தப் பதிவில் அப்படிப்பட்ட பிரம்மாண்டமான பலூன்களில் பறக்கப்போவதில்லை. நாம் தற்போது வாங்கப்போவதும் ஊதப்போவதும் தெருக்களில் விற்கும் பலூன்களையே. தம்மாதுண்டு பலூன், கொஞ்சம் காற்று இதைப் பற்றி ஒரு பதிவு அவசியமா என்பவர்களுக்கு இந்த பலூனும், காற்றும் என் வாழ்வில் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன என்பதை சொல்லும் பதிவே இது.
பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கும் போது இந்தியாவின் ஐந்தாண்டு திட்டம் தீட்டுவது போலவே பொம்மை தேர்வு செய்கிறார்கள். கீழ போட்டா உடையாதுல்ல, தண்ணியில் போட்டா கலர் போயிடாதில்ல, குழந்தை வாயில் வைத்தால் ஏதாவது ரசாயனம் கலந்து செல்லத்துக்கு ஏதாவது ஆகிவிடுமோ? என பல உத்தரவாதங்களும் உறுதிமொழிகளும் வாய்மாறுகின்றன.

என் தந்தை இதையெல்லாம் விட ஒருபடி மேல். பலூன் விற்பவனிடம் வெடிக்காத பலூன் கேட்டால் அவன் என்ன செய்வான்? கல்லால் பலூன் செய்தா கொடுக்க முடியும். இதனாலேயே பெரும்பாலும் பலூனுக்கு நான் கண்ணைக் கசக்கிகொண்டு நிற்பது அம்மாவிடம் தான்.
அன்றொரு நாள் அப்படி நடந்துதான் அந்த வீபரீதம்.

”டிர்க்”

”டிர்க் டிர்க்”

”டிர்க் டிர்க் டிர்க்”

தெருவில் பலூன் கைப்படி எழுப்பும் சத்தம் கேட்டவுடன் அந்த ஐந்து வயது நான், என் அம்மாவின் பயத்தம் பருப்பு டப்பாவின் சேமிப்பை கரைக்கத் தயாரானேன். என் மூன்று வயது தங்கையும் நினைத்ததை சாதிக்க கண் கசக்கக் கற்றுக் கொள்ளத் தொடங்கிய பருவம்.
வழக்கமான பரங்கிக்காய் போல இல்லாமல் இது வேறு மாதிரி அதுவும் ஒரு வண்டியில் கட்டிப் பட்டு இருந்தன அந்தப் பலூன்கள். சிகப்பில் வெள்ளை, மஞ்சளில் பச்சை, வயலிட்டில் பழுப்பு என வண்ணஜாலம் காட்டும் பப்பாளி வடிவு பலூன்கள் ஒரு பேராபத்தை வரவழைக்கப் போகிறது என அறியாமல் என் அன்னையும் அந்த வண்டியை நெருங்கினாள்.

”என்னது ஒரு பலூன் ரூ 1.50 ஆ அநியாயமாய் இருக்கிறது?” என் அன்னை வாய் பிளந்து நிற்க..

“அம்மா இது நைட்ரஜன் பலூன் மத்த பலூன் மாதிரி சீக்கிரம் காத்து இறங்காது மெஷின் ஊதின பலூன் அதான் விலை ஜாஸ்தி” என வேதியியல் பாடம் தொடங்கிய அவனிடம் ரூ 2.50க்கு இரண்டு பலூன்கள் வாங்கினாள் என் அன்னை.

பரங்கிக்காய் வடிவிலே பார்த்து பழகிய எனக்கு, அந்தப் பப்பாளி வடிவ பலூன்கள் தான் அப்போதைய உலகின் முதல் அதிசயம். மஞ்சளில் பச்சை எனக்கும், சிவப்பில் வெள்ளை என் தங்கைக்கும் என முடிவாகி வாங்கிக் கொண்டு குவார்ட்டசில் நுழைந்தோம். “தங்கச்சி, இது வெறும் பலூன் இல்லம்மா, உன் அண்ணனோட உயிர் மூச்சு” என்று தங்கையை சமாதானப் படுத்தி ஒரு பலூனை அவளிடம் கொடுத்துவிட்டு வெளியில் சென்றேன். நான் வராண்டாவில் மிதக்கும் நீர்க்குமிழியை கையில் வைத்துக்கொள்ள, இரண்டு நிமிடங்கள் கரைந்திருக்கும். வீட்டினுள்ளே இருந்து டமால் என ஒரு சத்தம். நான் நினைத்தது போலவே என் இரட்டை தம்பி தங்கைக்கு வாங்கிய ஒற்றை பலூன் சண்டையில் வெடித்திருக்கவேண்டும். ஆனால் வழக்கமாக கேட்க வேண்டிய இரு அழுகைக் குரல்களுக்கு பதிலாக என் தம்பியுடைய குரல் மட்டுந்தான் கேட்டது. எட்டிப்பார்தேன். என் தங்கை அழவில்லை. அதற்கு பதிலாக அவள் வாயில் அந்த சிவப்பு பலூன் ஒரு மாதிரி ஒட்டி இருந்தது. வாயில் இருந்து ஒரு வெள்ளை திரவம் வந்து கொண்டிருந்தது. கொட்டிக் கொண்டு இருந்தது என சொல்லவேண்டும்.

”அம்மா! ராஜிக்கு என்னமோ ஆயிடுச்சும்மாஆஆஆ...என்று நான் கத்த. என் தம்பியின் அழுகுரல் கேட்டு நடந்து வந்த என் தாய், என் அலறல் கேட்டு பதறி ஓடி வர தங்கைக்கு மூச்சு முட்டத் தொடங்கியது. தங்கை வாயில் நுரை கண்டதும் என் அம்மா செய்வதறியாது பதறிப்போனார்.
பலூனை வாயில் வைத்து விளையாடி இருக்கிறாள். அப்போது ஏற்பட்ட ஏதோ அழுத்தத்தில் அது வெடித்து அதன் நைட்ரஜன் முழுவதும் அவள் நுரையீரலில் இறங்கி ஏதோ வேதியியல் மாற்றம் நடந்து நுரை வேறு வந்திருக்கிறது. வேதியியலில் P.hd வாங்கவில்லையென்றாலும் பலூனால் தான் ஏதோ விபரீதம் என்று மட்டும் அம்மாவுக்கு புரிந்திருக்க வேண்டும்.
உடனே என் தங்கையை தோளில் தூக்கிக் கொண்டு என் தம்பிக்கு பக்கத்து வீட்டு அத்தையை காவல் வைத்து விட்டு, என்னை ஒரு கையில் பிடித்துக் கொண்டு ஓட்டமா நடையா என அறுதியிடுக் கூறமுடியாத ஒரு வேகத்தில் இரண்டு தெரு தள்ளி இருக்கும் மருத்தவமனையை அடைந்தாள்.

இவ்வளவு நடந்தும் வீபரீதம் அறியா நான் என் மஞ்சள் பலூனை இன்னும் கையிலேயே வைத்திருந்தேன். எப்படி அலுவலகத்தில் இருந்த என் தந்தைக்கு தகவல் போனது என இன்று வரை தெரியவில்லை அவரும் பதறி ஓடி வர நான் என் பலூனை பத்திரமாக டாக்டர் டேபிளுக்கு அடியே வைத்தேன்.

டாக்டரும் இன்னும் சில நர்சுகளும் என் தங்கையை படுக்கவைக்கப்பட்டு இருந்த அந்த அறைக்கு நான்கு முறை நடந்து சில மணி நேரங்கள் கடந்த பின் எல்லாம் சரியாகிவிட்டது. குழந்தை மயக்கத்தில் இருக்கிறது. இன்று ஒரு நாள் இங்கிருந்துவிட்டு நாளை அழைத்து செல்லலாம் எனக் கூறிய பின் தான் அம்மா அழுகையை நிறுத்தினாள்.
பலூனின் மொத்த கதையும் என் தந்தையிடம் கூறப்பட நான் முக்கிய குற்றவாளியானேன், “நடராஜா! வீட்டுக்கு போ, நீ செத்த” என்று மனதிற்குள் நினைத்தாலும் அம்மா அழுதால் நமக்கு அடி விழாது என்ற நம்பிக்கையில் டாக்டரின் அறைக்குள் நுழைந்து என் மஞ்சள் பலூனை எடுத்துக் கொண்டு திரும்பினேன் பிறகுதான் தெரிந்தது என் கணிப்பு எவ்வளவு தவறென்று. முதுகில் மின்சாரம் பாய்ந்தது. பலூன் பலவந்தமாக பறிக்கப்பட்டது. நைட்ரஜன் காற்றிலையே கலந்தது.

அதன் பின் பலூன் என்பது ஒரு கொலைக்காரக் கருவியாகவே என் வீட்டில் பார்க்கப்பட்டது. திருவிழாவில் என்னதான் அழகான கார், கைராட்டினம் என வாங்கினாலும். ற்றை நூலில் அவ்வளவு பெரிய காற்றடைத்த பலூனை பிடித்துக்கொண்டு நடக்கும் அந்த சந்தோசம் கடைசி வரை கிடைக்காமலே போனது.

                          --------18 வருடங்களுக்குப் பிறகு--------

நான் ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்திருந்தேன், கிறிஸ்துமஸ் நெருங்கும் காலம். Bay Decoration பற்றி ஒரு கலந்துரையாடலில் பலூன் முக்கிய பங்கு வகிக்கப் போகிறது என முடிவு செய்தார்கள். Bay முழுவதும் சிவப்பு நிறந்திலும் நீல நிறத்திலும் அழகான பலூன்கள். 18 வருடங்களுக்கு பிறகு முழுதாக ஒரு பலூன் என் கையில். ஆஹா என்னவள் தீண்டியிருந்தால் கூட அப்படி ஆனந்தம் வந்திருக்காது. கிறிஸ்துமசும் கடந்து போனது. அட! இன்னும் ஒரு மேஜையில் இருந்தும். கணிணியில் இருந்தும் பலூன்கள் நீக்கப் படவே இல்லையா?. யாருடைய மேஜை என்று சொல்லித் தெரியவேண்டுமா? மேலாளர் நீக்கச் சொல்லும் போது நான் சொன்னது.

”Why should I murder a balloon. Isn’t bursting out the air from a body called murder?”

இப்போதும் பண்டிகை ஒன்று வருகிறதென்றால் அலுவலகத்தில் என் மேஜையில் தான் முதலில் பலூன் கட்டப்படும் இறுதிவரை அவை சுவாசித்து கொண்டிருப்பது என் மேஜையில் தான்.