Thursday, September 22, 2011

தெருநாய்



உலக உயிர்களின் பரிமாண வளர்ச்சியின் உச்சாணியை மனித இனம் அடையும் முயற்சியில் சில விலங்கினத்தின் வாழ்வியல் நெறிகளையும் மாற்ற நேர்ந்தது. விலங்குகளுக்கு ஏது வாழ்வு நெறி என வியப்பவர்களுக்கு வாழ்வு நெறிகளை உருவாக்கிய மனிதனே ஒரு விலங்குதான் என்பதை நினைவு படுத்த விழைகிறேன்.

உலகில் உள்ள எந்த பசுவும் மற்ற உயிரைக் கொன்று உண்ணாது! உலகில் உள்ள எந்த சிங்கமும் புலால் உணவை தவிர்க்காது! படைக்கப் பட்ட போது அவைக் கொண்ட நெறிகள் காலம் மாறினாலும் இன்னும் அப்படியேத்தான் உள்ளன. ஆனால் மனிதனுக்கு காலம் மாற மாற பரிமாண வளர்ச்சி என்ற பெயரில் தம் வாழ்வியல் நெறிகளை மாற்றிக்கொண்டே தான் இருக்கிறான்.

இவ்வாறு நெறிகளில் மனிதனால் மாசுபட்டவை தான் நாய்கள். ஒரு மனிதனை நாம் இகழ அதிகம் உபயோகிக்கும் இந்த சொல் இகழ் சொல்லாக எதனால் உருமாறியது என்று இன்று வரை தெரியவில்லை. ஏன் யாருமே பூனை, நரி என்று மற்றவரை இகழ்வதில்லை இவை அப்படியே நாய்களைப் போலத் தானே?

நாய்களின் வாழ்வு முறை பெரும்பாலும் நரிகளை போன்றுதான் இருந்திருக்க வேண்டும். ஆயின் உணவு கிடைக்கும் எளிதான தன்மையால் அவை மனித இனத்தோடு சேர்ந்து தன் இனத்தையே மற்றொரு இனத்துக்காக கொல்லும் மனித புத்தியை அடைந்ததால் நாய்கள் வேட்டை மனிதனின் மிக நெருங்கிய நண்பர்களாய் இருந்துவிட்டன.

உலகின் முதல் கூலிப்படையான வேட்டை நாய்கள் உருவாகிய பின் தான், தன் தேவைக்காக ஒரு உயிரின் உதவி கொண்டு ஒரு உயிரை பறிக்கலாம் என்ற எண்ணம் உதித்திருக்க வேண்டும். இப்படி மனித இனத்திலும் தனது முத்திரையை பதித்த நாய்கள் நம் வாழ்வின் ஒரு பகுதியாக ஒன்றிவிட்டன.


 தொடர்ந்து ஜெயிக்கும் இந்திய கிரிக்கெட் அணி எப்படி சாத்தியம் இல்லையோ அதே போல தெருநாய்கள் இல்லாத இந்தியாவும் சாத்தியமல்ல. இந்தியாவின் வாஸ்துப்படி ஜனத்தொகையோடு நாய்தொகையும் சேர்ந்தே வளர்ந்தது. தெருவுக்கு ஒரு அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட செல்ல நாய்கள் சுகாதாரத்துக்கு பெயர் போன இந்திய தெருக்களில் பெருகத் தொடங்கின.

மனித உயிரைப் பற்றி பெரிதும் வருந்தாத அரசியல்வாதிகள் ஆளும் நாடு நாய்களைப் பற்றியா கவலைப்படப் போகின்றது? அதனால் இந்தியாவின் இரவுத் தெருக்களைப் பதிவு செய்யும் போது ஒளியாக மங்கிய தெருவிளக்கும், ஒலியாக தெருநாயின் ஊளையும்தான் பதிவு செய்யப்படுகிறது. 


நமது தேசிய பொருளாதாராம் கருப்பே என்றாலும் நமது தேசிய நிறம் பழுப்பாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் பெரும்பான்மையான இந்தியர்கள் பழுப்பு நிறமாகத்தான் இருக்கின்றனர் இந்திய நாய்களும் கூட. என்னதான் இறைவன் இலட்சம் நிறங்களையும், மனிதன் கோடி நிறங்களையும் படைத்தாலும் நாய்கள் பெரும்பாலும் கருப்பு, வெள்ளை, பழுப்புதான்.

மனிதனுக்கும் நாய்க்கும் ஒரு பொதுவான குணாதிசியம் உண்டு. பெரும்பாலும் இருவரும் தம் சூழ்நிலைகளை கணக்கு செய்த பின் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். மனிதன் எப்படி பகலில் அலுவலகத்தில் மேலாளரிடம் வாலாட்டி இரவு வீட்டுக்கு வந்த பின் மனைவியடம் குலைக்கிறானோ நாய்களும் காலை உரசிச் சென்ற இரு சக்கர வாகனத்திடம் பதுங்கி இரவு அவற்றை தொந்திரவு செய்யாமல் போபவரையும் குலைக்கும்.

நகராட்சி மற்றும் மாநகராட்சி முதல் நாய் பிடிக்கும் வண்டிகள் முன்னர் இருந்தாலும் யாரேனும் காயப்படும் வரை இந்திய அரசின் நிர்வாகம் போலவே துருப்பிடித்து இருக்கும். நகராட்சி அலுவலகங்களில் சில மனுக்கள், மாமன்ற உறுப்பினரிடம் சில பொருமல்கள், பொதுமக்களின் சாலை மறியல், மருத்துவமனைகளின் வெறிநாய்க்கடிகளின் எண்ணிக்கை இவற்றை பொருத்து அவற்றின் பயன்பாடு பெருகும்.


அப்படியாவது அவற்றின் எண்ணிக்கை குறைந்ததா என்றால் அதுவும் இல்லை. தெருநாய்களை எண்ணிக்கையை ஏன் குறைக்க வேண்டும் அவையும் இவ்வுலகில் வாழ்ந்துவிட்டு போகட்டுமே என்பவர்களுக்கு ஒரு பந்தயம். அதில் நீங்கள் வென்று வந்து விட்டால் தெருநாய்களுக்கு குரல் கொடுக்கவும்.

பந்தயத்தின் விதிமுறைகள் பின் வருமாறு. இரு கைகளிலும் ஐந்து கிலோ எடையுள்ள பைகளை வைத்துக் கொண்டு அதிகாலை மூன்று மணிக்கு மந்தவெளி பொது மைதானத்திலிருந்து BSNL அலுவலகம் வரை இரு நாய்களிடம் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற வேண்டும். அவ்வளவே. உண்மையாகவே முயற்சி செய்ய விழைபவர்களுக்கு தயவு செய்து ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கொள்ளவும். ஏனெனில் சிறு கீறல்களை எளிதாக தவிர்க்கலாம்.

எச்சரிக்கை! சில சமயம் அவை இரண்டும் பற்களை உபயோகப்படுத்தக்கூடும். அப்போது இரு கைகளில் உள்ள பைகளை லாவகமாக சுழற்றி அவை மேல் படாமல் பயமுறுத்த வேண்டும். மேலே பட்டால் ஓட்டபந்தயத்தின் எல்லை நீளக் கூடும். அவ்வப்போது ச்சூ ச்சூ என சத்தமிட்டாலும் ஓட்டத்தின் வேகம் குறையக்கூடாது அவற்றை கண்களின் பார்க்க கூடாது. அனுபவத்தால் சொல்கிறேன்.


இவ்வாறு பல ஊர்களில் ஓட்டப்பந்தயத்துக்கு பயிற்சி எடுக்க பல இடங்கள் உள்ளன. தூரமும் நாய்களின் எண்ணிக்கையும் கொஞ்சம்(!) மாறுபடும். ஆனால் அதே நாய்கள் நீங்கள் பகலில் எட்டி உதைத்து சென்றாலும் கம்மென்று வாலை சுருட்டிக்கொண்டு ஓடி விடும். ஏனெனில் பகலில் வீரத்தைக் காட்டினால் வாழ்வாதாரமான ஆட்சி எல்லைக்கு உட்பட்ட குப்பைத்தொட்டியும் உறைவிடமான தண்ணீர் தொட்டியின் நிழலும் கிடைக்காது என அவற்றின் மரபணுக்களில் பதிந்துவிட்டது எனவே கூறலாம்.

தெருநாய்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு(?) என்ற திட்டத்தில் மிக உறுதி உள்ளவன் நான். ஆனால் அதன் செயல்பாடு எந்த அளவுக்கு உருப்படியாக இருக்கிறது என்றால் கடந்த பத்து வருடங்களாக தேரடித் தெருவை ஆண்டு வந்த வாலில் வெள்ளையும் முகத்தில் கொஞ்சம் கருப்பும் கொண்ட பழுப்பு ராஜா மறைவுக்குப் பின் கண்ணில் கருப்பும் உடல் முழுவதும் வெள்ளையும் கொஞ்சம் புசுபுசு வால் கொண்ட நாய் தேரடித் தெரு சக்ரவர்த்தியாக பதவி ஏற்று கொண்டுவிட்டது.



ஒரு மனிதக் குழந்தை அனாதையாக விடப்பட்டால் சமூகத்தில் எப்படி அவனால்/அவளால் வாழ முடியாதோ நாய்களும் அப்படித்தானே. பெற்ற நாய் இருக்கும் போது எப்படி அனாதையாக இருக்க முடியும் என்று தர்க்கம் செய்பவர்கள் மனித ஆதரவு இல்லையென்றால் இறைவனும் ஒரு அனாதையே. 
 
மனிதன் பராமரிப்பு இல்லாமல் மனிதனால் உருவாக்கப்பட்ட ஊர்களில் எப்படி நாய்களால் வாழ இயலும்? என்று உண்மையான மக்களிடம் அக்கறை உள்ள அரசு, மக்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படும் அரசு நிர்வாகத்தை ஏற்கிறதோ அதுவரை இவர் போன்ற அனாதைகள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள் என் போன்ற ஒலிம்பிக்கில் பதக்கம் பெறாத ஓட்டப்பந்தய வீரர்கள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள்.



பின் குறிப்பு: நாய்கள் பற்றி எனக்கு என்ன தெரியும் என்பவர்களுக்கு எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என் வீட்டில் நாய்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. இப்பதிவை எழுதும் போது கூட இரு முறை பக்கத்து வீட்டு அழைப்பு மணிக்கு குரல் கொடுத்த என் நான்கு கால் கொண்ட சகோதரனை அமைதிபடுத்தி விட்டுத் தான் எழுதினேன்.

Friday, September 16, 2011

இன்று அவள் பிறந்தநாள் அல்ல! மலர்ந்த நாள்!

மலருக்குள் மலர்கள் சாத்தியமா என எக்காளமிட்டவர் நீ முதல் கண் திறந்தபோது மூச்சின்றி நின்றனர்!

பிறந்த பின் சீனி கொடுத்தார்களாம் உனக்கு அன்று முதல்தான் சர்க்கரை தித்திக்க தொடங்கியதோ!

நிமிர்ந்து உன் தாய் முகம் முதல் பார்த்ததாலல்லவா அவளுக்கு சொர்க்கவாசம் சாத்தியமாயிற்று!

நீ முதலில் தவழ்ந்தபோது அல்லவா பூமாதேவி பூப்படைந்திருப்பாள்?

நீ நவின்ற முதலெழுத்து தான் ஆயுத எழுத்து! எத்தனைக் கொலைகள் செய்தாயடி ஓரெழுத்தில்!

உண்ணும் தானியத்தில் உண்பவர் பெயர் எழுதினான் இறைவன்! நீ முதல் அமுதுண்ட போது அதில் இறைவன் தன் பெயர் எழுதினான் தெரியுமா?

நாமிருவரும் ஒரே மாதிரி சீருடை அணிந்ததால் சனி ஞாயிறு கூட பள்ளிச்சீருடை களைய மறுத்தேன்!

கடலை மிட்டாயயை காக்காய் கடி கடித்து உன் தோழிக்கு கொடுத்தாயே! அந்த தோழியாக நான் இருந்திருக்க கூடாதா?

கீதை சொன்ன கிருஷ்ணன் இன்று இருந்திருந்தால் சொல்லி இருப்பான் “என் கடன் உனைக் காதல் செய்வதே என்று”!

படைப்பெனும் செய்முறை தேர்வில் கடவுளின் முழு மதிப்பெண் நீ தான் பெண்ணே!

உனைப் படைத்த அன்றுதான் முதலில் மது அருந்தினானாம் கடவுள்! அதோடு மதுவை மறந்தான் இந்த மாதுவைக் கண்டு!

நீ பிறந்தன்று மிக அழகான சொர்க்கம் விஸ்வர்மாவை வேலையை விட்டு நீக்கினான் இந்திரன்! பூமி சொர்கத்தை விட அழகானதால்!

உந்தை சொல்கிறார் வீட்டுக்கு Interior Decoration செய்ய வேண்டுமென்று! நீ வீட்டில் இருப்பதை விட சிறந்த Interior Decorationனும் உண்டோ!


நீ உந்தாய் கர்பத்தில் இருந்த போது அவள் புளிப்புண்ண மாங்காய் உண்டு ஏமாந்த கதை எனக்கும் தெரியும்! சாம்பல் கூட சர்க்கரைதானாம்!

உன் கைப்படாமல் மிளகாய் எல்லாம் மறைகிறதாம்! அதன் பிறவிப்பயனான காரம் தருவதை அதனால் அடையமுடியாமல் இறப்பதால்!

நான் உனை முதலில் கண்டபோது பூக்கள் உதிரவில்லை! தென்றல் வீசவில்லை! மழை பொழியவில்லை! ஆயின் நான் ஆவியுடனே மறுபிறவி அடைந்துவிட்டேன்!

தங்கத்துக்கு சுவை உண்டா என்பவர்கள் உன் கைபட்ட உணவை ஒரு முறை சாப்பிட்டால் சந்தேகம் தீர்ந்துவிடும்!

உன் வீட்டு குப்பைத்தொட்டியில் நீ கடித்து துப்பிய நகங்கள் தான் இளவரசிகளாம்! உன் தலை உதிர்ந்த முடிதான் பேரரசியாம்!

உன் அம்மாவுக்கு சர்க்கரை நோய் என வருந்தினாய்! பைத்தியமே உனைச் சுமந்ததால் தான் அது வந்ததென என்று உணர்வாய்?

அவளின் புன்னகை தான் பற்களால் எழுதப்படும் ஒரே கவிதை!

தங்க விலையேற்றம் எனை பாதிக்கவில்லை நான் எப்போதோ ஐம்பது கிலோ தங்கத்தை பத்திரப்படுத்திவிட்டேன் உனை என் இதயத்தில் பூட்டியதின் மூலம்!

மற்றவர் கோவிலுக்கு செல்வது கடவுளைக் கண்டு தம் துயர் நீங்க! நீ ஆலயம் செல்வது கடவுள் உனைக் கண்டு அவர் துயர் நீக்க!

அவளுக்கு நேரம் காட்டும் கடிகாரம் எப்போதும் P.M மட்டும் தான் காட்டுகிறதாம்! நிலா இரவில் தானே வரும்!

அவள் பிறந்த நாளை வானம் கொண்டாடுகிறது! மழை!

அவள் அங்கிருந்து வந்திருக்கலாம்! நீ எவ்வளவு அழுது கேட்டாலும் சரி என்னவளை தர மாட்டேன்! மழை!

இறைவன் வெறும் ஈக்கள் மட்டுந்தான் படைத்தான்! உன்னை மொய்த்தவை தேனீக்கள் ஆக மாறின!

நீரின்றி அமையாது உலகு! நீயின்றி அமையாது அழகு!

தொலைக்காட்சி தவறான செய்திகளையே தருகிறது! மலர் கண்காட்சி ஊட்டியிலாம்! அப்போது அவள் வீட்டில் இருப்பதை என்ன சொல்வீர்கள்!

பதில் தெரியா கேள்வி இது? அவள் நகர்வது மிதப்பதலா? நடப்பதாலா? சொல் அவளின் வெண் கொலுசே!

உனக்கு மாலையிட்ட போது பூக்கள் சொன்னது! “மூடனே பூந்தோட்டத்துக்கு மாலை இட்ட வேலை நீ மட்டும் செய்தாய் என்று”

அறிவில்லா இறைவா! அவளையும் படைத்து எனக்கு ஒரே ஒரு இதயத்தையும் படைத்தாயே! இரு கண்களால் காண்பதை எப்படி ஓர் இதயம் தாங்கும்!

அவள் வான் விட்டு நீங்கியதால் கண்ணீர் வடித்து உருவானதே கடல்!

உலக அழகி போட்டியை பார்க்கும் போது சிரிப்புத்தான் வருகிறது எனக்கு!

அழகின் உச்சம் பேரழகி நீ அழகுத் தமிழ் பேசுவது!