Wednesday, April 4, 2012

இன்று எனக்கு பிறந்தநாள்




இன்று என் பிறந்தநாள்!

அவள் இதழ் ஒவ்வொரு மில்லி மீட்டராய் விரிந்து கொண்டிருக்கிறது!

நான் செத்து கொண்டிருக்கிறேன்!

இப்படித்தான் அந்த நிகழ்வை மூன்றே வரிகளில் சொல்ல வேண்டும். பத்தை இரண்டோடு கூட்டினால் வரும் பன்னிரெண்டாம் வகுப்பு பரிட்சையை முடித்த போது, பத்தோடு எட்டைக் கூட்டினால் வரும் பதினெட்டாம் வயதின் வாசலில் நின்றேன்.

மற்றவர்க்கு கோடை பிறந்தது. எனக்கு வசந்தம் பிறந்தது.

காலண்டர் ஏப்ரல் 4 என காட்டியது. ஆனால் இன்றைக்கு அழகாய் தெரிந்தது. வழக்கமாக இருக்கும் அதே முருகன் தான். அதே புன்னகைதான். அதே காகிதம் தான். ஆனால் இன்று மட்டும் இந்த நாட்காட்டியிடம் ஒரு நொடிக்கும் மேலான நேரத்திற்கு கண்களால் பேசிக்கொண்டிருக்கிறேன். தன்னுடையது என்றால் தலைமயிரென்றாலும் பெரிது என்ற கண்ணதாசன் சொன்னது இதைக் குறித்துதானோ?

அம்மாவின் வாழ்த்து. அப்பாவின் ஆசிர்வாதம். புதிய துணிகள், இனிப்புகள், நண்பரின் வாழ்த்து என்று வழக்கமான நடைமுறைகளோடு இந்த பிறந்தநாளும் கழிந்துவிடும் என்று தான் நினைத்தேன்.

தானொன்று நினைக்க கடவுள் ஒன்று நினைப்பான் என்ற பழமொழியை 
இன்று காலை நாட்காட்டியில் படித்தது, இன்றே என் வாழ்வில் நடக்கும் என என் மூளையின் எந்த நியூரானும் எண்ணிப்பார்த்திருக்காது.

திடீரென்று தென்றல் வீசுவுது போன்ற ஒரு உணர்வு. சூரியன் மேகத்தின் பின் ஒளிந்து கொண்டான். வெப்பத்துக்கு வேர்த்து கொட்டி எங்கோ குளிர்பிரதேசம் நோக்கி ஓடியது. சுருக்கமாக சொன்னால் சட்டென்று மாறியது வானிலை.

அறையை விட்டு நீங்கினேன். பேச்சுக்குரல்கள். புதிய மனிதர்களின் குரல்கள்.

ஒரு வேளை கூடத்துக்கு வந்திருக்கக் கூடாதோ?. இவ்வளவு குளுமையான வலியை என் கண்கள் அனுபவித்து நான் அறிந்ததில்லை. என் நாசி உணர்வது தான் அழகின் நறுமணமா? என்னை அறியாது என் மேல் தாடைகள் இன்னும் மேலே இழுக்கப்பட்டன. கீழ் தாடைக்கு அடியே மட்டும் புவியீர்ப்பு சக்தி இன்னும் அதிகமாகி கீழ்தாடையை இழுத்து கொண்டது. வாய் பிளந்து நின்றேன்.

ஏன்டா அங்கையே நின்னுட்ட? நம்ம பக்கத்துவீட்டுக்கு குடி வந்திருக்காங்க. இவன் தாங்க என் பையன். பேரு……………… இன்னும் என்னவோ என் அருமை பெருமைகளை விளக்கிக்கொண்டிருந்தாள். அதெல்லாம் சரி பரவசம் என்னும் அனுபவம் இங்கு தலையில் வகிடெடுத்து, நீல ஸ்டிக்கர் பொட்டு ஒட்டி, இரு கண்கள், ஒரு மூக்கு, ஒரு வாய், இரு காதுகள் கொண்டு, காதின் முடிவில் நீல நிற கல் பதித்த நட்சத்திர தோடு பதித்து, வான் நீல சுடிதார் அணிந்து உட்கார்ந்திருக்கிறதே. இதென்ன படைப்பாய் இருக்கும் என்று வியந்து கொண்டிருந்தேன்.

அப்போது அந்த படைப்பின் வாய் அசைந்தது. ஏதோ ஓசை வேறு கேட்கிறதே. உற்று கேட்க புருவங்களை சுருக்கினேன். அந்த ஓசை ஏதோ வார்த்தைகள் போல. ஓசை வார்த்தைகளாய் மாறா அந்த வினையை எனது சுருங்கிய புருவமும் துருத்திய கழுத்தும் என் முன் அமர்ந்திருக்கும் அந்த படைப்புக்கு தெரிவித்திருக்க வேண்டும்.

மறுபடியும் இதழ்கள் இருக்கும் இடம் அசைந்தது.

“ஹேப்பி பர்த்டே.”

ஆங்கிலம். ஆம் ஆங்கிலமேதான். ஆக இது மனித படைப்புதான். பேசுவதும் மனித மொழிதான். ஆம். பெண்ணே தான்.
உலகம் உணர்ந்தது. நான் பூமி என்னும் கிரகத்தில் வாழும் மனிதன். ஆண். இன்னாருக்கு மகன். Debit the receiver. Credit the giver. அ, ஆ, இ, A,B,C,D எல்லாம் புரிந்தது.

வாஸ்து சரியில்லை என்று என் இதயம் உணர்ந்திருக்க வேண்டும். என்னைக் கேட்காமலே தொண்டை குழிக்கு இடமாறியிருந்தது. நன்றி, தேங்க்ஸ் இன்னும் என்னன்னவோ சொல்ல முயற்சித்து ஒரு வழியாக தேங்க்ஸ் என்று ஒலிக்கும் விதத்தில் எதையோ ஒன்று சொல்லி முடித்தேன்.

இந்தப் பதிவின் முதல் மூன்று வரிகளை மீண்டும் ஒரு முறை படித்து கொள்ளுங்கள். செத்துக் கொண்டிருக்கும் போது தொந்திரவு செய்யாதீர்கள்.

நண்பர்களாகிவிட்டோம்! ஒரே கல்லூரி! ஒரே வகுப்பு!

அவளுக்கு பிடித்த நிறம் பச்சை. பிடித்த ஹீரோ மாதவன், பிடித்த பேனா ஹீரோ பேனா, பிடித்த பாடம் cost accounting, பிடித்த படம் அலைபாயுதே, பிடித்த இடம் கடற்கரை, பிடித்த உணவு சப்பாத்தி, பிடித்த அணிகலன் தோடு, பிடித்த உடை சுடிதார், பிடித்த சேனல் சன் மியூசிக், பிடித்த விஷயம் மழை, பிடித்த ஐஸ்கிரீம் வெண்ணிலா. இப்படி பல பிடித்தல்களுக்கு இடையே என்னை பிடித்துவைத்துக் கொண்டிருந்தாள். வாழ்க்கையை பிடிக்க வைத்துக் கொண்டிருந்தாள்

கல்லூரி மூன்றாமாண்டு, கடைசி செமஸ்டர் தன் சாவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. தேதி: ஏப்ரல் 4.

“சொல்லுடா என்ன கிஃப்ட் வேணும்?.”

அடிப் பைத்தியக்காரி. உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் எனக்கு பரிசு தானே? நீ பார்த்த பொருளை நான் பார்த்திருக்கிறேன், நீ கேட்ட ஒலிகளை நான் கேட்டிருக்கிறேன். நீ கொண்டு வந்த டிபன் பாக்ஸில் உன் கையால் எடுத்து கொடுத்த உணவை உண்டிருக்கிறேன், நீ சுவாசித்து வெளிவிட்ட காற்று எனைத் தீண்டி சென்றிருக்கிறது, இப்படி என் வாழ்க்கையையே பரிசாக்கிய நீ, என்னோடு இருந்து இந்த பரிசுகளை கொடுத்து கொண்டே இருக்க வேண்டும்.

“டேய்! டேய்ய்ய்ய்! எப்படிடா நான் எதாவது கேள்வி கேட்டா உடனே செவ்வாய் கிரகத்துல போய் உக்காந்துடுற? இந்த உலகத்துக்கு வா.”

”உம் என்ன கேட்ட? கிஃப்டா? குதுப் மினாரை ஒரு கால் கிலோ வாங்கித் தாயேன்.”

“உன்னை போய் கேட்டேன் பாரு. நீ கிறுக்குத் தனமா பேசுவேன்னு தெரியும்.” என்ற படி அவளுக்கு விரல்களாய் அமைந்திருக்கும் தூரிகைகளை வளைத்து ஏதோ ஒரு வண்ணமயமான பெட்டியை பற்றி கையில் கொடுத்தாள்.

இந்த வண்ணக் காகிதம் அவள் வாங்கும் போது வெள்ளைக் காகிதமாகத் தான் இருந்திருக்க வேண்டும். அவள் தூரிகை விரல்கள் பற்றியதால் தான் இந்த வண்ணங்கள் அதன் மேல் ஒட்டியிருக்கக்கூடும் என்று செவ்வாய் கிரகத்தில் நுழைந்து கொண்டே அந்த காகிதத்தை பிரித்தென்

“ஹேய்! வாட்ச்! சூப்பர்.” அதைத் தவிர என்னால் அப்போது ஏதும் சொல்ல முடியவில்லை.

“ஏன்டா நான் என்ன செஞ்சாலும் ஹேய்! சூப்பர் இதைத் தவிர எதையும் சொல்ல மாட்டியா?”

.“இப்போ என்ன சொல்லனும்?”

“எதையாவது சொல்லு.”

“ஐ லவ் யூ.”

எழுந்தாள். மிதந்தாள்.

ஒரு நொடி கரைந்தது, ஒரு நிமிடம் கடந்தது, ஒரு நாள் கழிந்தது. ஒரு வாரம் கழிந்தது. ஒரு மாதம் கழிந்தது. ஒரு வருடம் கழிந்தது.
இந்த நாட்களில் கடந்து போன என் வாழ்க்கையின் ஒவ்வொரு பரிமாணத்திலும் அவள் இருந்து கொண்டே இருந்தாள். பச்சை நிறமாக, மாதவன் படங்களாக, ஹீரோ பேனாவாக, cost accounting formulaகளாக, கடற்கரையாக, சப்பாத்தியாக, சன் மியூசிக்காக, மழையாக, வெண்ணிலா ஐஸ்கிரீமாக, என இருந்து கொண்டே இருக்கிறாள்.

மறுபடியும் ஏப்ரல் 4.

அலுவலகத்துக்கு பரபரத்துக் கொண்டிருந்தேன்
“டேய்!”

என் அறையின் வாயிலில் நின்று கொண்டிருந்தாள்.

”சாயந்திரம் வீட்டுக்கு வா! உன்கிட்ட பேசனும்.”

உலகம் உடைந்துகொண்டிருந்தது. கையில் வைத்திருந்த ஹெல்மெட் என் கீழ்த்தாடைக்கு பதில் புவியீர்ப்பை தான் இழுத்து கொண்டது.
சிரித்தாள். இருவரும் ஒன்றாக வீட்டை விட்டு வெளியே வந்தோம்.
பைக்கை உதைத்தேன்.

இன்னும் என் வீட்டின் வாசலில் தான் நின்று கொண்டிருந்தாள்.
சிரித்து கொண்டே இருந்தாள்.

ஐந்து கிலோமீட்டர் கடந்து வந்தும் அவள் சிரிப்பு என் கண்களை அடைத்துக் கொண்டே நின்றது.

இதென்ன லாரி டயர் கூட சிரிக்கிறது. இந்த டயர் ஏன் தலை மீது ஏறிச் செல்கிறது? என்னவோ செய்து போகட்டும். நான் காற்றில் மிதந்து கொண்டு இருக்கிறேன். அது மட்டும் தெரிகிறது. ஏனென்றால்..

இன்று என் பிறந்தநாள்!

அவள் இதழ் ஒவ்வொரு மில்லி மீட்டராய் விரிந்து கொண்டிருக்கிறது!

நான் செத்து கொண்டிருக்கிறேன்!

Tuesday, April 3, 2012

நான் யார்?







365 நாட்களாம் ஒரு வருடத்துக்கு! ஆனால் இந்த வருடத்துக்கு 366 நாட்கள்! அதில் ஒரு நாளில் தான் இப்போது நான் இருக்கிறேன். இந்த ஒரு நாளை அடைவதற்கு நான் பலநாட்களை கடந்து வந்துள்ளேன். அல்லது பல நாட்கள் தங்களது உயிரை மாய்த்து கொண்டு இந்த நாள் வாழ்வதற்காக தியாகம் செய்துள்ளன. எண்ணிப் பார்க்கிறேன்.
1     2     3     4     5     6     7      8     9  10 11    12    13    14    15    16    17     18    19    20    21    22    23    24    25    26    27    28    29    30    31    32     33    34    35    36    37    38    39    40    41    42    43    44    45    46    47     48    49    50    51    52…………….

நிறைய நாட்கள் தான் கடந்துவிட்டன! கரைந்துவிட்டன! இறந்துவிட்டன! ஒவ்வொரு நாட்கள் குறையும் போதும் அதை எண்ண முயற்சித்தால் எண்கள் அதிகமாகின்றன. இதற்கு பெயர் என்ன விதியோ தெரியவில்லை. இதுவரை இப்படி ஒரு தியரியை யாரும் சொல்லவில்லை என்றால் ”ஓலைக்கணக்கன் தியரி” என்று இதை உலகுக்கு தெரியபடுத்துங்கள். தமிழனுக்கு ஒரு தியரி கிடைத்த மகிழ்வை டாஸ்மாக்கில் இன்னொரு வட்டம் சுற்றி கொண்டாடலாம்.

சூரியன் என் முகத்தில் வெளிச்ச விரல்களால் அறைந்துகொண்டிருந்தான். ஒவ்வொரு வெப்பக்கதிரும், வெளிச்சத் துளியும் எனக்கு என் இருத்தலையும், உலகத்தின் இருத்தலையும் தெளிவாக உணர்த்திகொண்டிருந்தன.

உலகத்தின் இருத்தல் இருளில் உணரப்பட்டாலும், வெளிச்சம் தான் வெளிச்சம் போட்டு உணர்த்துகிறது. வெளிச்சத்தில் தான் இரண்டு வருடங்களுக்கு முன் நான் தூக்கிப்போட்ட மாங்கொட்டை மாமரமாக வளர்ந்து நிற்பது தெரிகிறது. நான் கூட இரண்டு சுற்று பெருத்துதான் விட்டேன்.

ஆனால் தான் இருக்கும் இடத்திற்கு நிலத்தடி நீரை உயர்த்துவது, நிழல் தருவது, காய் தருவது, கனி தருவது என பல சமூக பயன்களை தருகிறது. ஆனால் நான்? இது சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமோ? இதற்காகத்தான் இந்த வருடத்தின் இந்த நாளை எண்ணுவதை பற்றி எண்ணியிருக்கிறேனோ?

நான்.

நான் யார்?

பெரிய ஞானிகள் கூட செல்வம் துறந்து, சொந்தம் தவிர்த்து துறவு பூண்டு தெருவெல்லாம் அலைந்து, தவம் செய்து விடை கண்டுபிடித்து கண்டுபிடிக்காமல், என பல தொடர் புள்ளிகள் இடும் வாக்கியம் அமையும் அளவுக்கு விடை அமைக்க வல்ல கேள்வி இது.

அது என் நோக்கம் அல்ல! நான் இதுவரை என்ன செய்தேன் என எண்ணி பார்க்க வேண்டும். இந்த பூமியில் நான் அடைத்து கொண்டிருக்கும் இடத்துக்கு சிறிதெனும் நியாயம் செய்திருக்கின்றேனா? செய்ய முயற்சித்திருக்கிறேனா?

நியாயம் என்னும் போது யாருக்கு நியாயம் என்ற கேள்வி தோன்றுகிறது? எனக்கா? என் குடும்பத்துக்கா? நான் வாழும் தெருவுக்கா? என் ஊருக்கா? என் இனத்துக்கா? என் மொழிக்கா? என் நாட்டுக்கா? அல்லது மனித சமுதாயத்துக்கா?

இப்படி பட்ட எண்ணங்கள் எல்லாம் வாழ்வில் வெற்றி பெற்றவுடன், ஒரு கவுரவமான நிலையை அடையும் போது கேட்க வேண்டிய கேள்விகள்.
வாழ்வில் வெற்றி என்பது தான் என்ன? இந்த 24 வயதில் வெற்றி என்பது கல்வி, கல்வியால் ஈட்டப்படும் செல்வம், பின் செல்வத்தால் ஈட்டப்படும் உயர்கல்வி, அக்கல்வியால் ஈட்டப்படும் பெருஞ்செல்வம். இது தான் 
இப்போதைக்கு என் வெற்றி.

இந்த வெற்றியை ஈட்டுவதற்கு என்னிடம் திறமைகள் உளவா? அல்லது திறமையை வளர்க்க ஏதேனும் முயற்சி செய்திருக்கிறேனா? இல்லை! காலை அலுவலகம் சென்று அன்றைய நாளை நாற்காலியில் கடத்தி, மாலையை தொலைக்காட்சி முன் இருக்கும் சோபாவில் பயனற்றதாய் போக்கியிருக்கிறேன்! எனவே இல்லை!

திறமைகளைத் தாண்டியும் தேவையானது சமுதாய கட்டமைப்பை அறிதல். சமுதாயத்தை படித்தாலே திறமை வந்துவிடுமே. சமுதாயம் என்பது என்ன? என்னை சுற்றி உள்ளது யாவுமே சமுதாயம் தான். மக்கள். சமுதாயத்தின் தவிர்க்கா இயலா அங்கம். அவர்களை அறிந்துவைத்திருக்கிறேனா? என் எதிர் வீட்டில் இருப்பது யார் என்று கூட தெரியாது. இருங்கள் அதை பார்க்கிறேன். அட! என் வீட்டுக்கு எதிரே இருப்பது வீடே இல்லை. இது ஒரு வணிக ஸ்தாபனம். அதுவே இப்போது தான் தெரிகிறது! எனவே இதுவும் இல்லை!

குறைந்தபட்சம் என் தாயின் வார்த்தைகளை எந்த அளவுக்கு மதித்து நடந்திருக்கிறேன். பொழுதோடு இல்லம் சேர் என்று அவள் சொன்ன காலை தேய்ந்த இரவன்று இரண்டாம் காட்சிக்கு போன நான், என் அப்பாவின் கண்களில் பட்டுவிடக்கூடாது என்று, தாழிடாத கதவை பார்த்து அவள் கண்கள் எப்படி பூத்து போயிருக்கும். எத்தனை முறை அவளின் சமையலறை ரகசிய கஜானாவில் இருந்து, தந்தைக்கு தெரியாமல் செல்வத்தை எனக்கு அளித்திருப்பாள்.? எனவே தாய் சொல்லும் கேட்கவில்லை! இல்லை!

தாயென்னும் கோவிலைத் தான் போற்றவில்லை. தந்தையின் மந்திரத்தையாவது கேட்டிருக்கிறேனா? இல்லை!

வீட்டுக்கு தான் எதையும் பயனுள்ளதாக செய்ததில்லை. நாட்டுக்கு? குப்பையை பலகணியிலிருந்து வீசி இருந்திருக்கிறேன். ரசீது இல்லாது பொருட்கள் வாங்கியிருக்கிறேன், ஆண்டிருதியில் வரியைக் குறைக்க வீட்டு வாடகை ரசீதில் பொய்யான எண்களை நிரப்பியிருக்கிறேன். சுதந்திர தினத்தில் கொடிக்கு வணக்கம் செய்ததை தவிர நாட்டுக்கும் எந்த நல்லது செய்யவில்லை! இல்லை!

வசிக்கும் வீட்டுக்கு, வாழும் நாட்டுக்கு, இருக்கும் சமுதாயத்துக்கு எந்த நலனும் செய்ததில்லை.

உண்டிருக்கிறேன், உறங்கியிருக்கிறேன்.

தாங்கும் பூமிக்கு பாரமாய் இருந்திருக்கிறேன்.

வெளிச்சம் மறைத்து நிழல் உண்டாக்கி இருக்கிறேன்.

பொழியும் மழையை பயனற்றதாய் ஆக்கியிருக்கிறேன்.

இருளை அறுத்து விளக்கிட்டு இருக்கிறேன்.

பயனற்றது யாவையும் செய்திருக்கிறேன்.

எழுந்தேன்.

தொண்டை அடைத்தது.

தலை சுற்றியது.

வெறுப்பும், ஆத்திரமும் பொங்கியெழுந்தது.

அப்போது தான் அந்தக் குரல், என் தாயின் குரல், என் நலனை தன் நலனாய் கொண்ட அந்த தெய்வத்தின் குரல் எனை நோக்கி காற்றில் கரைந்து வந்தது.

 “டேய்! எப்ப பார்த்தாலும் மரத்தடியில உக்காந்துட்டு என்னத்தட வெறிச்சு பார்த்துட்டு இருக்க? வந்து பூரியை சாப்பிடுடா.”

“தொட்டுக்க என்னமா பண்ணியிருக்க? குருமாவா? கிழங்கா?”

“கிழங்கு தான்”.

”தோ வந்துட்டேம்மா.” சமையலறை நோக்கி நடந்தேன்

நீதி: கோபம் வரும் போகும் ஆனா பூரி???