எப்போதெல்லாம் அதர்மம் தர்மத்தை வென்று தலைதூக்குகிறதோ நான் பூமியில் அவதரித்து அதர்மத்தை அழிப்பேன்!
அதற்கு முன் எம்பெருமானுக்கு ஒரு எச்சரிக்கை!
மச்சமாக நீரில் நீர் வருவாயாயின் சமுத்திரத்தில் யாம் கலந்த கசடுகளால் காற்றில்லாமல் தவிக்கும் போது தம் பேராசை வலை கொண்டு உமை கொணர்வர்!
கூர்மமாய் உருவம் கொண்டு அதர்மம் அழிக்க வந்தால் சுங்க வரியின்றி சூட்கேஸில் சூடானுக்கு கடத்த இங்கு ஒரு கும்பலுண்டு!
பூதேவியை காக்க வராகமாக வந்து சிவனடியயே தோண்ட துணிந்த நீ இங்கிருக்கும் பிளாஸ்டிக் குப்பையை கண்ட பின் முடிவெடு!
இரணியனையே இரண்டாக பிளந்த நரசிம்மமாக வருவாயென்றால் வித்தியாசமான விலங்குண்டிங்கு என தமிழ் தலைப்பிட்டு கேளிக்கை வரியின்றி உமை காட்சிப் பொருளாக்கி விடுவர்!
மூன்றடியில் மூவுலகை அளந்த வாமனா எண்ணிப்பார் எங்கள் ஆசைகளை அளக்க எத்தனை அடிகள் வேண்டுமென்று!
சத்ரியர்களை சரிக்க சனித்த பரசே அவர்கள் இன்று அவர்கள் அரசியல்வாதிகள் என்ற பெயருடன் உனக்கு தேசத்துரோகி பட்டமளிப்பு விழா நடத்துவார்கள்!
ஹே ராம்! நீ ஒரு முறை பிறந்ததற்கே ஆறாயிரம் ஆண்டுகள் ஆயிரக்கணக்கான ஆவிகள் அண்டத்தை விட்டு அகன்று விட்டது! உன் பேர் சொல்லி அதர்மம் மேலும் வளரும்!
ஹரே கிருஷ்ணா! காதலிற்கும் கலகத்திற்கும் இங்கு பலர் உளர்! உனக்கே தெரியும் குருஷேத்திரம் கலியுகத்தில் சாத்தியமல்ல என்று!
பலராமா! உன் ஏராயுதம் உழுவதற்கு நிலமில்லாமல் துருக்கொண்டிருக்கும்! எதைக் கொண்டு அதர்மம் கொல்வாய்?
கல்கியே உனக்காகக் காத்திருந்து கண்கள் பூத்துவிட்டன! நீயே பிரளயத்தின் தூண்டுகோலாயின் ஏன் காத்திருக்கிறாய் இன்னும்! அரக்கர்களை அழித்த உம்மால் கேவலம் மனிதர்களை தொட இயலவில்லையோ?
அதர்மத்தை அழிக்க தசாவதாரத்தில் ஏதும் சாத்தியமில்லாததால் ஏகாதச அவதாரத்திலாவது சாத்தியமா??